சென்னை மாநகராட்சியில், “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாமில் பங்கேற்ற அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தில் 2 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இந்த முகாமில் குழந்தைகள் நலம், காது, மூக்கு, தொண்டை உள்பட 17 வகையான சிகிச்சைகளுக்கு மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறன் அளவு குறித்த பரிசோதனை செய்யப்பட்டு, உடனடி சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றனர்.
பருவமழை முன்னெச்சரிக்கையாக சென்னை மாநகராட்சியில், 351 கிலோ மீட்டர் தூரத்திற்கான மழை நீர் வடிகால் தூர்வாரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் பருவமழை காலங்களில் ஒரே நாளில் 2000 முகாம்கள் நடத்தப்பட்டு, மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
“அரசு மருத்துவமனைகளில் நாய்க்கடி, பாம்புக்கடிக்கு மருந்து இல்லை” என தகவல் வெளியாகி வருகிறது. கோவை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏதோ ஒரு கிராமத்தில் மருந்தில்லை என்றாலும், நானே விமான டிக்கெட் போட்டு தருகிறேன். அந்த ஊருக்கு வேண்டுமானாலும் நிரூபிப்பவர்கள் செல்லலாம். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் நாய் மற்றும் பாம்பு கடிக்கான மருந்துகள் இருப்பு எப்பொழுதும் வைக்கப்பட்டுள்ளது, என்று அவர் கூறினார்.
