சென்னை அயனாவரம் பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறு, பெண் காவலர் மீதான வன்முறையாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயனாவரத்தைச் சேர்ந்த 30 வயதான சத்யா, செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் புருசோத்தமன் வேலைக்குச் செல்லாமல், மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி சத்யாவுடன் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
சம்பவத்தன்று நள்ளிரவில் போதையில் வீட்டிற்கு வந்த புருசோத்தமன், சத்யாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அவர், வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால் சத்யாவின் கையில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சத்யா, சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அயனாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த புருசோத்தமனை அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
