மகாராஷ்டிராவில் திருமண விசேஷத்தில் நடந்த ஒரு சாதாரண தகராறு, ஒரு குடும்பத்தையே அழித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வினோத் ரத்தோட் மற்றும் அவரது மனைவி பாயல் ஆகியோர் உறவினர் வீட்டுத் திருமணத்திற்காகச் சென்றிருந்தபோது, பாயல் அங்கிருந்த டிஜே இசைக்கு நடனமாடியுள்ளார். இது வினோத்திற்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. பொது இடத்தில் மனைவி நடனமாடியதை கௌரவப் பிரச்சினையாகக் கருதிய வினோத், அங்கேயே மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த மோதலால் மனமுடைந்த பாயல், தனது குழந்தைகளுடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இருப்பினும், வினோத்தின் ஆத்திரம் அடங்கவில்லை. அதிகாலை நேரத்தில் பாயலின் தாய் வீட்டிற்குச் சென்ற வினோத், அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, பாயலின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர் தானும் அருகில் இருந்த வயல் வெளியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இந்தத் துயரமான சம்பவத்தால் அவர்களது இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் எட்டு மாதக் கைக்குழந்தை என மூன்று பிள்ளைகள் ஒரே நாளில் பெற்றோரை இழந்து அனாதையாக நிற்கின்றனர். ஒரு சிறிய நடனமும், தற்காலிகக் கோபமும் ஒரு அழகான குடும்பத்தை நிலைகுலையச் செய்துள்ளது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
