கர்நாடக மாநிலம் தொட்டபள்ளாப்பூரில் உள்ள விடுதி ஒன்றில், 23 வயதான வித்யா என்ற பெண் அவரது கணவர் ஆனந்தால் ஐடி கார்டு டேக் மூலம் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. கவுரிபிதனூர் தாலுகாவைச் சேர்ந்த வித்யாவும், முடுகெரே கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த ஆறு மாதங்களாக இவர்களிடையே குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் இரண்டு மாதங்களுக்கு முன்பு வித்யா கணவரைப் பிரிந்து பெங்களூருவில் உள்ள விடுதிக்குச் சென்று தங்கிய நிலையில், காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு சுமார் 20 நாட்களுக்கு முன்பு மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழத் தொடங்கினார்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு ஆனந்த் தனது மனைவி வித்யாவை தொட்டபள்ளாப்பூரில் உள்ள SGS விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இரவு 11:48 மணிக்கு இருவரும் அறைக்குள் செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. தொடர்ந்து, நள்ளிரவு 1:00 மணியளவில் ஆனந்த் அறையை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு, வித்யாவின் கைபேசியை எடுத்துக்கொண்டு தனியாக வெளியேறியுள்ளார். அறையைச் சாவியால் பூட்டிச் சென்றதால் விடுதி ஊழியர்களுக்கு ஆரம்பத்தில் எந்தச் சந்தேகமும் வரவில்லை.
https://twitter.com/HateDetectors/status/2100517342023229892/video/1
இருப்பினும், 24 மணி நேரத்திற்கு மேலாகியும் கணவர் ஆனந்தை விடுதி ஊழியர்கள் தொடர்புகொள்ள முயன்றபோது அவரது தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட, அங்கு வந்த காவல்துறை அறையைத் திறந்து பார்த்தபோது வித்யா உயிரிழந்து கிடந்தது கண்டறியப்பட்டது. இச்சம்பவம் குறித்து தொட்டபள்ளாப்பூர் நகரக் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள ஆனந்தை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
