ஒடிசா மாநிலம் பாலங்கீர் மாவட்டம் தேபதமுண்டா கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் கார்செல் (45) கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரெனக் காணாமல் போனார். இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதலில், தலையில்லாத அவரது சடலம் அருகில் உள்ள குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், கடைசியாகச் சந்தோஷுடன் சென்ற அவரது நண்பர் சத்ருக்னா சாஹூவைப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், 3 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற தனது மனைவி மீண்டும் தன்னுடன் சேர வேண்டும் என்றால் நரபலி கொடுக்க வேண்டும் என ஒரு சாமியார் கூறியதாகவும், அதனால் நண்பனை நரபலி கொடுத்ததாகவும் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார்.
மேலும், நண்பன் சந்தோஷின் உடலைக் குளத்தில் வீசிவிட்டு, அவரது துண்டிக்கப்பட்ட தலையைத் தனது வீட்டின் பூஜை அறையில் புதைத்து வைத்திருப்பதாகக் கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், பூஜை அறையைத் தோண்டி சந்தோஷின் தலையைக் கைப்பற்றினர். நரபலி கொடுத்த சத்ருக்னா சாஹூவைக் கைது செய்த காவல்துறையினர் அவரைச் சிறையில் அடைத்தனர்.
