உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூர் மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவி ஒருவரே தன் கணவரைக் கொடூரமாகக் சித்திரவதை செய்து கொலை செய்ய முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆங் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரஸ்தேபூர் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சீவ் திவாரி என்பவர் இனிப்புப் பண்டங்கள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று அவர் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது, அவருக்கும் அவரது மனைவி ரன்னோ தேவிக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது வன்முறையாக மாறியுள்ளது.
திடீரென ஆத்திரமடைந்த ரன்னோ தேவி, கணவர் சஞ்சீவின் தலையில் தடியால் பயங்கரமாகத் தாக்கியுள்ளார். அத்துடன் நிற்காமல், காயமடைந்த கணவரைத் தப்பிக்க விடாமல் கட்டிலில் வலுக்கட்டாயமாகக் கட்டிப்போட்டுள்ளார். பின்னர், சஞ்சீவின் உடல் முழுவதும் மின்சாரக் கம்பியைச் சுற்றி, அவருக்குக் கொடூரமான முறையில் மின் அதிர்ச்சி கொடுத்துக் கொல்ல முயன்றுள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அறையிலிருந்து சஞ்சீவ் மரண ஓலமிட்டு அலறிய சத்தத்தைக் கேட்டு, உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் உடனடியாக அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, சஞ்சீவ் கட்டிலில் கட்டப்பட்ட நிலையிலும், அவரது உடலில் மின்சாரக் கம்பி சுற்றப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் மின் இணைப்பைத் துண்டித்து, சஞ்சீவை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காகக் கான்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ஆங் போலீசார், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆதாரங்களைச் சேகரித்ததுடன், குடும்பத்தினரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பாகக் காவல் கண்காணிப்பாளர் அபிமன்யு மங்லிக் கூறுகையில், கணவர் மீது தாக்குதல் நடத்தி மின்சாரம் பாய்ச்சிய சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாகவும், ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்புதான் இதே மாவட்டத்தில் ஒரு பெண் தன் கணவர் மீது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திக் கொன்ற சம்பவம் நடந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறியிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
