ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அனுமந்த ராவ் மற்றும் சுகன்யா தம்பதிக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக ஆடு மேய்த்து பிழைப்பு நடத்தி வந்த நிலையில், சுகன்யாவுக்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை கணவர் கண்டித்ததால் தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு இவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில், ஆத்திரமடைந்த சுகன்யா தன் கணவர் அனுமந்த ராவை பாறாங்கல்லால் தாக்கியுள்ளார். இதில் அவர் உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை யாருக்கும் தெரியாமல் வீட்டின் பின்புறத்திலேயே சுகன்யா புதைத்துவிட்டார்.
இந்தக் கொலையை நேரில் பார்த்த தனது மகள் அம்ருதாவை, “வெளியே சொன்னால் உன்னையும் கொன்றுவிடுவேன்” என சுகன்யா மிரட்டியுள்ளார். இதனால் சிறுமி பயந்து அமைதியாக இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று தாய்க்கும் மகளுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட, சுகன்யா தன் மகளையும் கொல்ல முயன்றுள்ளார்.
