உத்தரப் பிரதேசத்தின் சந்த் கபீர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த புத்தி ராம் நிஷாத் என்பவர், 21 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தனது மனைவி ஃபுல்மதியை, அவரின் 26 வயது காதலன் அவதேஷுக்கே கிராம மக்கள் முன்னிலையில் முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளார். 5 குழந்தைகளுக்குத் தாயான ஃபுல்மதி, காதலனுடன் வாழவே விருப்பம் தெரிவித்ததால், குடும்பத்தில் தினமும் ஏற்படும் சண்டைகளுக்கும் மன உளைச்சலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் கணவர் இந்த முடிவை எடுத்துள்ளார். உள்ளூர் சிவன் கோயிலில் நடைபெற்ற இத்திருமணத்திற்குப் பின், மனைவியை மனதார வாழ்த்தி “பிடாய்” சடங்கு முறைப்படி வழியனுப்பியும் வைத்தார்.
இந்த வினோத முடிவு குறித்துப் பேசிய புத்தி ராம், “எனக்கு பிளாஸ்டிக் டிரம்முக்குள் அடைபட்டுச் சாக விருப்பமில்லை; நிம்மதியாக வாழவே ஆசைப்படுகிறேன். மனைவியின் மகிழ்ச்சியில்தான் என் மகிழ்ச்சியும் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இரு வீட்டாரின் சம்மதத்துடன் இந்நிகழ்வு நடந்துள்ளதால், காவல்துறையிலும் இது தொடர்பாக எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை. மனைவியின் விருப்பத்திற்கு மதிப்பளித்து, அவரைக் காதலனுக்கே தாரை வார்த்துக் கொடுத்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கணவர் குறிப்பிட்ட அந்த “ப்ளூ டிரம்” பின்னணி, நாடு முழுவதும் உலுக்கிய ஒரு கொடூரக் கொலை சம்பவத்தைக் குறிப்பதாகும். கடந்த ஆண்டு வெளிநாட்டிலிருந்து திரும்பிய கணவர் ராஜ்புத் என்பவருக்கு மனைவியின் கள்ளக்காதல் தெரியவந்ததால், மனைவியும் அவளது காதலனும் இணைந்து அவருக்கு நஞ்சளித்து, கொடூரமாகக் கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை 15 துண்டுகளாக வெட்டி, வீட்டிலிருந்த நீல நிற பிளாஸ்டிக் டிரம்மில் போட்டு சிமெண்ட் ஊற்றி மறைக்க முயன்றபோது காவல்துறையிடம் சிக்கினர்.
இந்த அதிர்ச்சி சம்பவத்திற்குப் பிறகே, மனைவிகளால் தங்கள் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடக் கூடாது என்றும், குடும்பச் சண்டையில் நிம்மதியிழந்து டிரம்முக்குள் பிணமாக அடைபடுவதை விட மனைவியை அவர் விரும்பிய காதலனுடனேயே சேர்த்து வைப்பதே சிறந்தது என்றும் கணவன்மார்கள் யோசிக்கும் புதிய போக்கு அரங்கேறத் தொடங்கியுள்ளது. அன்பும் பாசமும் பலனளிக்காத நிலையில், உயிரைக் காப்பாற்றிக் கொண்டு நிம்மதியைத் தேடும் கணவர்களின் இந்த முடிவு சமூக வலைதளங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
