கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் அருகே உள்ள காணக்காரி என்ற பகுதியை சேர்ந்த ஷாம் ஜார்ஜ் (59) என்பவருக்கு ஜெசி சாம் (49) என்ற மனைவியும் 28 வயதில் ஒரு மகளும், 25 மற்றும் 23 வயதில் இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவருமே வெளிநாட்டில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஆன சாம் ஜார்ஜ் கோட்டையம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் பயணம் மற்றும் சுற்றுலா படிப்பு படித்து வந்துள்ளார். அப்போது அவருக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. இது தொடர்பாக கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 15 வருடங்களாக இருவரும் ஒரே வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.
இதனிடையே சாம் ஜார்ஜிக்கு கோட்டயத்தில் 4.5 ஏக்கர் நிலமும், கோவா மற்றும் கோவளத்தில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதனால் கணவன் மனைவியிடையே சொத்து தகராறும் இருந்ததால் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இப்படியான நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் உள்ள மகள் தாயை பலமுறை போனில் அழைத்தும் அவர் பதிலளிக்காததால் உடனே போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் உடனே ஷாம் ஜார்ஜ் வீட்டுக்கு விரைந்து சென்ற போது வீட்டில் கணவன் மனைவி இருவரும் இல்லாததால் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இதனிடையே நேற்று இடுக்கி மாவட்டம் உடும்பனூர் அருகே உள்ள செப்புக்குளம் பகுதியில் 50 அடி பள்ளத்தில் பெண்ணின் சடலம் ஒன்று கிடப்பதாக தகவல் அறிந்து விரைந்த போலீசார் உடலை கைப்பற்றிய போது அது ஜெசி என தெரிய வந்தது. அத்துடன் சாம் ஜார்ஜ் தலைமறைவாக இருப்பது தெரியவர அவரை போலீசார் தீவிரமாக தேடி கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் மனைவியை கொலை செய்து உடலை பள்ளத்தாக்கில் வீசிய உண்மையை ஒப்புக்கொண்டார். கணவன் மனைவி இருவருக்கும் வீட்டில் தகராறு ஏற்பட்டபோது ஜெஸ்ஸியின் முகத்தில் சாம் ஜார்ஜ் மிளகு ஸ்பிரே அடித்துள்ளார்.
இதில் மயக்கம் அடைந்த அவரை படுக்கையறைக்கு கொண்டு சென்று துண்டால் கழுத்தை நெறித்து மூச்சுத் திணற வைத்து கொலை செய்துள்ளார். அத்துடன் அன்று இரவே அவரது உடலை காரில் போட்டு பள்ளத்தாக்கில் வீசிவிட்டு மைசூருக்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. ஜார்ஜ் உடன் கோட்டையும் பல்கலைக்கழகத்தில் ஈரான் நாட்டை சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் மிக நெருக்கமாக பழகி வந்த நிலையில் இவருக்கும் இந்த கொலை வழக்கில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்த போலீசார் அவரையும் கைது செய்த விசாரித்து வருகிறார்கள்.
