“அவ என் பொண்டாட்டி அவளை அவன்கூட அனுப்ப மாட்டேன்”… காதலனுடன் சென்ற மனைவி… போலீஸ் ஜீப்பிலேயே கணவன் செய்த பகீர் காரியம்…!

By Nanthini on சித்திரை 8, 2026

Spread the love

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் ஜஹீராபாத் பகுதியைச் சேர்ந்த சித்தா ரெட்டி (36) என்பவர், பானி பூரி கடை நடத்தி வந்த நிலையில், 2014-இல் கவிதா (29) என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு ஒன்பது மற்றும் ஆறு வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தொழில் காரணமாக சித்தா ரெட்டி அதிகாலையில் சந்தைக்குச் செல்வதும், இரவு தாமதமாக வீடு திரும்புவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இச்சூழலில், வீட்டில் தனியாக இருந்த கவிதா அதிக நேரம் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி வந்ததாகவும், இதனால் கணவருக்குச் சரியாக உணவு கூட வழங்காமல் போனில் மூழ்கிக் கிடந்ததாகவும் கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் வாயிலாக பக்கத்து ஊரைச் சேர்ந்த பவன் குமார் என்பவருடன் கவிதாவிற்குப் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி வெளியில் சென்று வந்த நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த சித்தா ரெட்டி கவிதாவைக் கண்டித்துள்ளார். இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த மார்ச் 27-ஆம் தேதி இரவு, தனது இரு குழந்தைகளையும் தவிக்கவிட்டு கவிதா தனது காதலன் பவனுடன் வீட்டை விட்டுத் தப்பியோடினார். இதுகுறித்து சித்தா ரெட்டி ஜஹீராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

   

புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், தலைமறைவான ஜோடியின் செல்போன் எண்களைக் கொண்டு அவர்களைத் தேடினர். அவர்கள் ஜாட்செர்லா பகுதியில் இருப்பதை உறுதி செய்த போலீசார், அங்கு சென்று கவிதா மற்றும் பவனை மீட்டனர். விசாரணைக் காக சித்தா ரெட்டியையும் அழைத்துக்கொண்டு அவர்கள் காவல் வாகனத்தில் ஜஹீராபாத் நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, வாகனத்தில் வைத்து மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சித்தா ரெட்டி, ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்று “என்னை விட்டுவிட்டு அவனுடன் சென்ற உனக்குச் சாவுதான் தண்டனை” எனக் கூறி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கவிதாவைச் சரமாரியாகக் குத்தினார்.

   

போலீஸ் வாகனத்திலேயே அரங்கேறிய இந்த எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த போலீசார், இரத்த வெள்ளத்தில் இருந்த கவிதாவை மீட்டனர். இருப்பினும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சித்தா ரெட்டியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலனுடன் சென்ற மனைவியைக் கணவனே காவல்துறை வாகனத்தில் வைத்துப் படுகொலை செய்த இச்சம்பவம் தெலுங்கானா மற்றும் அண்டை மாநிலங்களில் பெரும் அதிர்வலைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.