ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஜோதிஸ்வரி (30) என்ற பெண் எம்பிபிஎஸ் மற்றும் எம்எஸ் படித்துள்ளார். மீனம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரும் இவர் சென்னை கோடம்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். இவருக்கும் ராமநாதபுரத்தை சேர்ந்த யோகீஸ்வரன்(34) என்ற நபருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்த நிலையில் இன்ஜினியரான அவர் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். திருமணம் முடிந்து கணவன் மனைவி இருவரும் மூன்று மாதங்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்த நிலையில் பிறகு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் மனைவியை பிரிந்து தன் சொந்த ஊருக்கே சென்று வீட்டில் இருந்தே பணியாற்றி வந்துள்ளார். அடிக்கடி மனைவியை பார்க்க வந்து சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சுதந்திர தின விழா விடுமுறை என்பதால் பெருங்களத்தூர் ஸ்ரீராம் கேட்டில் 12 மாடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தன்னுடைய சகோதரி முத்துலட்சுமி வீட்டுக்கு ஜோடீஸ்வரி சென்றுள்ளார். பிறகு மாலை தனது வீட்டுக்கு புறப்படுவதாக கூறிவிட்டு கிளம்பிய அவர் கீழே செல்லாமல் மேலே சென்று தனது செருப்பு மற்றும் கைப்பையை கழற்றி வைத்துவிட்டு 12வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் ஜோதிஸ்வரிக்கு திருமணம் ஆகி பத்து மாதங்களை ஆவதால் அவர் ஒரு உருக்கமான கடிதமும் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில், கணவர் மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கஞ்சா பழக்கம் உட்பட பல்வேறு தீய பழக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் டேட்டிங் செயலி மூலமாக 30க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து அவர்களுடன் பழகியுள்ளார். எதர்ச்சியாக கணவரின் லேப்டாப்பை பரிசோதனை செய்த போது அவர் பல பெண்களுடன் தொடர்பில் இருக்கும் விஷயம் தெரிந்து ஜோதீஸ்வரி மனமுடைந்த நிலையில் தன் அக்கா வீட்டுக்கு சென்றபோது இந்த சோக முடிவை எடுத்து உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்துள்ளது. போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
