திருநெல்வேலியில் பட்டப்பகலில் நடுரோட்டில் ஒரு ஆசிரியை அவரது கணவராலேயே வெட்டப்பட்ட கொடூரச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் வடசேரியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வரும் முத்துசெல்வி என்பவரே இந்தத் தாக்குதலுக்கு ஆளானவர் ஆவார்.
முத்துசெல்விக்கும் அவரது கணவர் சேர்மந்துரைக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, அவர் தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணவர் சேர்மந்துரை, முத்துசெல்வியைப் பின்தொடர்ந்து சென்று வள்ளியூர் பேருந்து நிலையம் அருகே அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இந்தக் கொடூரமான தாக்குதலில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய ஆசிரியை முத்துசெல்வியை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
