சென்னை பெரம்பூரைச் சேர்ந்த 27 வயதான ரெபேக்கா, கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் கேஷியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த ஜூலை 31 அன்று மாலை பொதுமக்கள் போல வங்கிக்குள் நுழைந்த நபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரெபேக்காவைச் சரமாரியாக வெட்டினார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் தாக்குதல் நடத்திய நபரைப் பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டவர் ரெபேக்காவின் கணவர் சதீஷ்குமார் என்பது தெரியவந்தது.
காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு இடையே ஏற்பட்ட சந்தேகத்தாலும் மதுப் பழக்கத்தாலும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கடந்த ஆண்டு இவர்களின் 6 வயது மகளை நீதிமன்றம் மனைவியிடம் ஒப்படைத்துவிடும் என்ற அச்சத்தில், குழந்தையைக் கழுத்தறுத்துக் கொன்றுவிட்டுச் சிறை சென்ற சதீஷ்குமார் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இந்நிலையில் கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்த சதீஷ்குமார், பழிவாங்கும் நோக்கத்தோடு வங்கிக்குச் சென்று மனைவியைக் கொல்ல முயன்றது அம்பலமாகியுள்ளது.
