துணிவு படத்தை அடுத்து, அஜீத்குமார் தற்போது நடித்து வரும் படம் விடாமுயற்சி. அஜர்பைஜானில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்த படத்தின் கலை இயக்குநர் மிலன், ஷூட்டிங்கில் பங்கேற்ற நிலையில், திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.
அஜீத்குமாரின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான மிலனின் மறைவு, டைரக்டர் மகிழ்திருமேனி உள்ளிட்ட பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. விடாமுயற்சி படம் மற்றும் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் கங்குவா, நயன்தாரா நடிக்கும் மண்ணாங்கட்டி என 3 படங்களுக்கும் கலை இயக்குநராக, மிலன் பணிபுரிந்த நிலையில், அவர் மறைந்தது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

கலை இயக்குநர் மிலனின் மறைவை அடுத்து அந்த படங்களில் மிலனுக்கு மாற்றாக, மிலனின் மரியாவே கலை இயக்குநராக தொடரட்டும் என படத்தின் இயக்குநர்கள், நடிகர்கள் ஒத்துக்கொண்டதால் 3 படங்களிலும் மரியா, கலை இயக்குநராக பணி செய்கிறார். அவர் மிலனுக்கு உதவி கலை இயக்குநராக, பல படங்களில் பணி செய்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தனது கணவர் மிலன் குறித்து பல விஷயங்களை மரியா மனம் திறந்து பேசி இருக்கிறார்.

மரியா கூறுகையில், என் கணவர் மிலன் எதையும் பாதியில் விட மாட்டார். ஒத்துக்கொண்ட வேலையை முழுமையாக செய்யாமல் ஓய்வெடுக்க மாட்டார். தனது வசதிக்காக, அதை காம்ப்ரமைஸ் செய்துக்கொள்ளும் பழக்கமும் இல்லாதவர். அதனால், அவர் விட்டுச் சென்ற பணிகளை, இந்த 3 படங்களிலும் நான் சிறப்பாக செய்து முடிப்பேன்.

அஜித்குமார், எனது கணவரின் நீண்ட கால நண்பர். இருவரும் நேரடியாக எதையும் பேசிக்கொள்பவர்கள். அடிக்கடி சந்திக்கா விட்டாலும், அவர்களது நட்பு ஆழமானது. என் கணவர் மறைவு குறித்து அஜீத்குமார் எனக்கு தைரியம் சொன்னார். சூர்யா, சிறுத்தை சிவா ஆகியோரும் எனக்கு நம்பிக்கை அளித்தனர். அதனால், கலை இயக்குநராக என் கணவர் விட்டுச் சென்ற பணிகளை நான் சிறப்பாக முடித்துக் காட்டுவேன், என்கிறார் மரியா.
