அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்ற விவகாரத்தில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த சூழலில், அசோக்குமாருக்கு எதிராக கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் பிறப்பிக்கப்பட்ட ‘லுக்-அவுட்’ (Look-out) நோட்டீஸை திரும்பப் பெற உத்தரவிடக் கோரி, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு முன்னதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தபோது, இதற்கு விரிவான பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த முக்கிய மனுவானது சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு மற்றும் அமலாக்கத்துறை தரப்பில், இந்த மனுவிற்குப் பதிலளிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் அமர்வு, அசோக்குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை அடுத்த மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்து அதிரடி உத்தர பிறப்பித்துள்ளது.
மறுபுறம், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘தமிழக வெற்றிக் கழக’ (தவெக) ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் மற்றொரு புதிய வழக்கும் இவர்கள் மீது பாய்ந்துள்ளது. இது தொடர்பாக சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் ஆகிய இருவருக்கும் போலீசார் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், இன்றைய தினம் அவர்கள் இருவரும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணைக்கு ஆஜராகாததைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் ஆகிய இருவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில் திருவல்லிக்கேணி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, நாட்டின் அனைத்துப் பகுதிகளில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களுக்கும் இவர்களுக்கு எதிரான புதிய லுக் அவுட் நோட்டீஸை போலீசார் அனுப்பியுள்ளனர். இதன் காரணமாக அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்புப் பணிகள் பலமடங்கு தீவிரப்படுத்தப்பட்டு, பாதுகாப்புப் படையினர் தீவிர அலர்ட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.
