மாணவர்களின் தற்கொலைகள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்ற வேதனையான கேள்வியோடு, ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் நீட் தேர்விற்குத் தயாராகிக் கொண்டிருந்த 22 வயது இளைஞர் உமேஷ் மாலி தற்கொலை செய்துகொண்டுள்ளார். “மன்னித்து விடுங்கள்… நான் மிகவும் தூரத்திற்குச் செல்கிறேன்” என்று உருக்கமாகத் தனது தற்கொலை குறிப்பில் எழுதிவைத்துவிட்டு அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். நீட் தேர்வு நடப்பதற்கு இன்னும் வெறும் 6 நாட்களே இருந்த நிலையில், இந்த துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்தத் தற்கொலைக்கு பாஜக அரசின் ஊழல் நிறைந்த அமைப்பே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாணவர்களின் கனவுகளை நசுக்கி, அவர்களைக் கொலை செய்யும் இந்த அவல நிலையைப் பற்றிப் பிரதமர் நரேந்திர மோடி கவலைப்படாமல் தன் சொந்த உலகிலேயே மூழ்கியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. மோடி ஆட்சியில் வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளுக்கு யாரும் பொறுப்பேற்பதும் இல்லை, அதற்கு காரணமானவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதும் இல்லை என்பது மிகவும் அவலத்திற்குரியது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
