“ஆஹா, ஓஹோ பிம்பங்கள் இனி வேலைக்காவாது”…. சட்டமன்றத்தில் திடீரென அணைக்கப்பட்ட கேமராக்கள்… முதலமைச்சர் விஜய் பதறியதன் பின்னணி… தமிழக அரசியலை உலுக்கும் எச்.ராஜாவின் அந்த ட்வீட்….!

By Nanthini on ஆனி 20, 2026

Spread the love

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் தவெக அரசை விமர்சித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள காரசாரமான அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக சட்டமன்ற நிகழ்வுகள் அனைத்தும் எவ்விதத் தடையுமின்றி முழுமையாக நேரலை செய்யப்படும் என்று முதலமைச்சர் வாக்குறுதி அளித்திருந்ததை சுட்டிக்காட்டியுள்ள அவர், தற்போது ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது நேரலை திடீரென நிறுத்தப்பட்டதற்கு தனது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் மற்றும் அதன் மீது எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசியது வரை மட்டுமே நேரலை ஒளிபரப்பப்பட்டது என்று எச்.ராஜா குறிப்பிட்டுள்ளார். அதன் பிறகு ஆளுநர் உரை மீதான முக்கிய விவாதங்கள் தொடங்கியவுடன் நேரலை நிறுத்தப்பட்டதை விமர்சித்துள்ள அவர், காகிதத்தில் எழுதி வைக்கப்பட்ட தீர்மானங்களை மட்டுமே முதலமைச்சரால் படித்து சமாளிக்க முடியும் என்றும், எதிர்க்கட்சிகள் எழுப்பும் எதிர்பாராத திடீர் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் முதலமைச்சர் திணறுவார் என்ற பயமே இந்த நேரலை நிறுத்தத்திற்குக் காரணம் என்றும் சாடியுள்ளார்.

   

“கத்திரிக்காய் முத்தினால் கடைக்கு வந்தே தீரும்” என்ற பழமொழியை மேற்கோள் காட்டிப் பேசியுள்ள எச்.ராஜா, சட்டமன்றத்தில் நடக்கும் தட்டுத்தடுமாற்றங்களை முதலமைச்சர் இரும்புத்திரை போட்டு மறைக்க முயன்றாலும், அவை சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் ஜனநாயகத்தில் அன்றே வெளிவந்துவிடும் என்று கூறியுள்ளார். மக்களின் பார்வையில் இருந்து உண்மைகளை மறைக்க முற்படும் இத்தகைய “ரகசிய செட்டிங்” வேலைகள் ஏன் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

   

மேலும், வெறும் ‘ஆஹா, ஒஹோ’ என்ற வெற்றுப் பிம்பங்களை கட்டமைப்பதன் மூலம் மட்டும் ஒரு மாநில அரசை ஆக்கபூர்வமாக நடத்திவிட முடியாது என்று எச்.ராஜா அறிவுறுத்தியுள்ளார். அவ்வப்போது வந்து வசனங்களை படித்துவிட்டுப் போவதற்கு சட்டமன்றம் ஒன்றும் சினிமா படப்பிடிப்புத் தளம் கிடையாது என்று விமர்சித்துள்ள அவர், அன்றாட மக்கள் பிரச்சினைகளையும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களையும் உன்னிப்பாகக் கவனித்து உண்மையான உள்ளுணர்வோடு ஆட்சி செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் கடந்த ஆட்சியைப் போல ஒரு “பொம்மை முதல்வர்” என்ற பெயரையே தற்போதைய முதலமைச்சரும் பெற நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.