வாஷிங்டனில் உள்ள வாஷிங்டன் ஹில்டன் ஓட்டலில் நேற்று இரவு (ஏப்ரல் 25, 2026) வெள்ளை மாளிகை செய்தியாளர்களுக்கான வருடாந்திர இரவு விருந்து நடைபெற்றது. இந்த விழாவில் அதிபர் டொனால்ட் டிரம்ப், மெலனியா டிரம்ப், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி தொடங்கிச் சிறிது நேரத்திலேயே ஓட்டல் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் உடனடியாகச் செயல்பட்டு டிரம்ப், வான்ஸ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களைப் பத்திரமாக வெளியேற்றிப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்றனர்.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், பாதுகாப்புப் படையினரின் துரித நடவடிக்கையைப் பாராட்டியுள்ள அவர், நிலைமை சீரானதும் திட்டமிட்டபடி நிகழ்ச்சியைத் தொடரத் தான் விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
