அமெரிக்காவில் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்காக மீண்டும் ‘துப்பாக்கியால் சுடும்’ முறையை (Firing Squad) அமெரிக்க நீதித்துறை கூட்டாட்சி அளவில் அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்த விஷ ஊசி செலுத்தும் முறைக்கு மாற்றாக, டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. விஷ ஊசிக்குத் தேவையான மருந்துகளை விநியோகிக்க பன்னாட்டு நிறுவனங்கள் மறுப்பு தெரிவிப்பதாலும், ஊசி செலுத்துவதில் ஏற்படும் குளறுபடிகளால் கைதிகள் அதிக சித்திரவதைக்கு உள்ளாவதாலும் இந்த மாற்று வழிமுறை கையில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையின்படி, மரண தண்டனை கைதி ஒரு நாற்காலியில் கட்டப்பட்டு, அவரது இதயத்தைக் குறிவைத்து ஐந்து வீரர்கள் ஒரே நேரத்தில் துப்பாக்கியால் சுடுவார்கள். ஏற்கனவே உட்டா, தென் கரோலினா உள்ளிட்ட ஐந்து மாகாணங்களில் இம்முறை சட்டப்பூர்வமாக உள்ள நிலையில், தற்போது கூட்டாட்சி அளவிலும் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனினும், மனித உரிமை அமைப்புகள் அரசின் இந்த முடிவை காட்டுமிராண்டித்தனமானது எனக்கூறி கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
