2026-ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி அவையிலிருந்து பாதியிலேயே வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தொடரின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்றும், ஆளுநர் உரைக்கு முன்னும் பின்னும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான மோதல் போக்கு சட்டப்பேரவையில் எதிரொலித்துள்ளது. ஆளுநர் உரையை முழுமையாக வாசிக்காமல் புறக்கணித்துவிட்டு அவர் வெளியேறியதைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் அப்பாவு ஆளுநர் தயாரித்த உரையின் தமிழாக்கத்தை வாசித்தார். ஆளுநரின் இந்த திடீர் வெளியேற்றம் அரசியல் வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
