விவசாயிகளின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட முக்கியமான திட்டமே பிரதம மந்திரி கிசான் கிரெடிட் கார்டு (KCC) ஆகும். இத்திட்டத்தின் கீழ், குறுகிய காலக் கடனாக விவசாயிகள் அதிகபட்சமாக ₹5 லட்சம் வரை பெறலாம்.
இதில், பயிர்த் தேவைகளுக்காக ₹3 லட்சம் வரையும், கால்நடை வளர்ப்பு, மீன்வளம் போன்ற விவசாயம் சார்ந்த பணிகளுக்காக ₹2 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. பொதுவாக 7% வட்டி விதிக்கப்பட்டாலும், கடனைச் சரியாகத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு 4% என்ற குறைந்த வட்டியில் கடன் கிடைக்கிறது.
சிறு மற்றும் குறு விவசாயிகள் மட்டுமின்றி, நிலமற்ற தொழிலாளர்கள், மீன்வளம், தோட்டக்கலை, பால் பண்ணை போன்ற துறைகளில் உள்ளவர்களும் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். KCC-க்கு விண்ணப்பிக்க நீங்கள் விரும்பும் வங்கியின் இணையதளத்திற்குச் சென்று, உங்கள் விவரங்கள் மற்றும் நிலம் சார்ந்த தகவல்களைப் பதிவிட்டுச் சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்கு ஆதார், பான் கார்டு, நில ஆவணங்கள், இருப்பிடச் சான்று மற்றும் வங்கிக் கணக்கு நகல் போன்ற ஆவணங்கள் தேவை. நீங்கள் தகுதி வாய்ந்தவராக இருப்பின், வங்கி நிர்வாகமே சில நாட்களில் உங்களைத் தொடர்புகொண்டு கிரெடிட் கார்டை வழங்க வழிவகை செய்யும்.
