சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராகப் பணியாற்றிய வழக்கறிஞர் ஜி. கிருஷ்ணராஜா, கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தமிழக அரசின் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநராகச் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் சட்டத்துறையில் நடத்திய ஆய்வுகளின் போது, குற்ற வழக்குகள் தொடர்வு துறையில் சில முறைகேடு புகார்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் நிர்மல் குமாரின் அதிரடி உத்தரவின்பேரில், தமிழக அரசின் குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜாவை பதவியிலிருந்து நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அவருக்குப் பதிலாக, பொறுப்பு குற்ற வழக்கு தொடர்வு இயக்குநராக ஆர். சேகர்துரை தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோன்று, மின்சாரத் துறையிலும் ஆய்வுகளை மேற்கொண்ட அமைச்சர் நிர்மல்குமார், முறையான ஆய்வுகளுக்குப் பிறகே புதிய டெண்டர் அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். அதனடிப்படையில், மின்சாரத் துறையில் உள்ள டெண்டர்கள் குறித்த விவரங்களை முழுமையாக ஆராய்வதற்காக மூன்று தனிக் குழுக்களை அமைத்து மின்சாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
