தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, விவசாயிகளின் முக்கியமான கோரிக்கையான முழு பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர்கள் தங்களுக்கு உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயலும் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த கூட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக வலுவான அழுத்தத்தை தர முடியும் என்று விவசாயிகள் நம்புவதாகவும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
