மத்திய அரசின் தொழிலாளர் அமைச்சக வழிகாட்டுதலின்படி, நாடு முழுவதும் புதிதாகப் பணியில் சேரும் இளம் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPFO) கணக்குகளில் குறைந்தபட்சம் ₹3,000 சிறப்புத் தொகையாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. மே மாதத்தில் முதல் முறையாக வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கான இந்த ஊக்கத்தொகை, ஜூன் மாதத்தில் அவர்களின் கணக்குகளுக்குச் சென்று சேர்கிறது. கடந்த சில மாதங்களாகவே இந்த நடவடிக்கை தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாதங்களில் இணைந்த லட்சக்கணக்கான புதிய உறுப்பினர்களும் இந்த நிதிப் பாதுகாப்பைப் பெற்று பயனடைந்துள்ளனர்.
இளம் தலைமுறையினரின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், புதிய ஊழியர்களின் முதல் மாதச் சந்தாவை அரசே ஏற்றுக் கொள்கிறது. இதன்படி, மாதச் சம்பளம் ₹1 லட்சம் வரை உள்ள ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ₹15,000 வரை மூன்று தவணைகளாக இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்தொகை நேரடியாக ஊழியர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்குச் செல்லாமல், அவர்களின் PF கணக்கிலேயே சேமிக்கப்படும். இது எதிர்கால ஓய்வூதிய நிதியை வலுப்படுத்துவதோடு, இளைஞர்களிடையே முறையான சேமிப்புப் பழக்கத்தையும் ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதேவேளையில், பயனாளிகளின் வசதிக்காக ‘EPFO 3.0’ என்ற அதிரடி சீர்திருத்தங்கள் மூலம் தொழில்நுட்ப ரீதியாகப் பல முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. முன்பு இணையதளச் சிக்கல்களால் முடங்கிய பல சேவைகளுக்கு மாற்றாக, இப்போது ‘Passbook Lite’ சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே ஒரு உள்நுழைவு (Login) செய்துகொண்டால் போதும். ஊழியர்கள் தங்களின் PF இருப்பு, எடுத்த தொகை மற்றும் ஓய்வூதிய விவரங்களை நொடிகளில் அறிந்துகொள்ளலாம். மேலும், வேலை மாறுபவர்கள் தங்களின் ‘Annexure K’ பரிமாற்றச் சான்றிதழை இனி ஆன்லைனிலேயே எளிதாகப் பெற முடியும்.
இந்த சீர்திருத்தங்களின் அடுத்த கட்டமாக, யுபிஐ (UPI) மற்றும் ஏடிஎம் (ATM) மூலமாக மிக எளிதாக, சில நொடிகளில் PF பணத்தை எடுக்கும் அதிநவீன வசதிகளும் விரைவில் அமலுக்கு வர உள்ளன. மென்பொருள் பொறியாளர்கள் முதல் சாதாரணத் தொழிலாளர்கள் வரை அனைவரும் எளிதில் அணுகும் வகையில் இந்த நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவித்து, தொழிலாளர் நலனை மேம்படுத்தும் மத்திய அரசின் இந்த சிறப்புத் திட்டப் பலன்களைப் பெற, புதிய ஊழியர்கள் தங்களின் EPFO கணக்குகளைத் தவறாமல் சரிபார்த்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
