தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் நடிகர்களுக்கு வளர்ந்ததும் வாய்ப்புகள் வருவதில்லை. அப்படியே வந்தாலும் அதில் அவர்கள் ஜொலிப்பதில்லை. அப்படி ஜொலித்தவர்கள் ஒருசிலரே கமல்ஹாசன்,ஸ்ரீதேவி போல ஒருசிலரே குழந்தை நட்சத்திரமாக அறிமுகாமி வளர்ந்த பின்னர் தமிழ் சினிமாவையே கலக்கியவர்கள்.
80களில் தமிழ் சினிமாவில் அப்படி குழந்தை நட்சத்திரமாக கலக்கியவர்தான் காஜா ஷெரிஃப். பாக்யராஜ் நடிப்பில் பாரதிராஜா இயக்கிய புதிய வார்ப்புகள் திரைப்படத்தில் கதாநாயகியின் தம்பியாக நடித்திருப்பார். ஆனால் அவருக்கான அடையாளத்தை உருவாக்கியது பாக்யராஜ் இயக்கிய முதல் படமாக சுவரில்லாத சித்திரங்கள் தான். படத்தில் காஜா எடுக்கும் பையனாக அறிமுகமானார். அந்த படத்தில் அவர் நடித்த வேடம் ரசிகர்களிடம் பெரியளவில் பேசப்பட்டது.
கவுண்டமணியிடம் அடிவாங்கிக் கொண்டே தில்லுமுல்லுகளை செய்யும் சிறுவனாக அந்த படத்தில் அவர் நடித்திருந்தார். பின்னாளில் கவுண்டமணியோடு இணைந்து செந்தில் செய்த நகைச்சுவைகளுக்கு இந்த கதபாத்திரமே ஒரு அச்சாரமாக அமைந்தது என்றும் சொல்லலாம்.
அதன் பிறகு காஜா ஷெரிஃப் அந்த ஏழு நாட்கள் மின்சார சம்சாரம் போன்ற படங்கள் மூலமாக புகழின் உச்சத்தை தொட்டார். குழந்தை நட்சத்திரமாகவே 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவருக்கு வளர்ந்த பின்னர் வாய்ப்புகள் வரவில்லை. அப்படி வந்த வாய்ப்புகளையும் அவர் தன்னுடைய குடிப்பழக்கத்தால் இழந்துள்ளார். கடைசியாக சிட்டிசன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில் காஜா ஷெரிஃப் ஒருநாள் கவுண்டமணியை சந்தித்த போது அவர் “என்கிட்ட அடி வாங்குன எல்லா பயலும் பெரிய ஆளாயிட்டான். நீ மட்டும்தான் அதுல தப்பிப் போயிட்ட” என்று கூறினாராம். கவுண்டமணியிடம் அடி வாங்கும் கதாபாத்திரத்தில் நடித்த செந்தில், வடிவேலு, மயில்சாமி உள்ளிட்ட நடிகர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
