கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கு பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமையா (88). இவரது மனைவி லட்சுமி (75). இந்தத் தம்பதியினர் அப்பகுதியில் தனியாக வசித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமையா கடைக்குச் சென்றிருந்த நிலையில், லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இளம் பெண் ஒருவர், தன்னை அரசு ஊழியர் போல அறிமுகப்படுத்திக் கொண்டு, மூதாட்டியிடம் மிகவும் கனிவாகப் பேசியுள்ளார்.
அரசு நலவாரியத் திட்டத்தில் உங்களைச் சேர்த்து விடுகிறேன், அதன் மூலம் உங்களுக்கு அரசு உதவித்தொகை கிடைக்கும் என்று அந்தப் பெண் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய லட்சுமியிடம் ஆதார் மற்றும் ரேஷன் கார்டு நகல்களை அவர் கேட்டுள்ளார். மேலும், நலவாரிய அட்டைக்காகப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றும், அப்போது காதில் கம்மல் இருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார். இதனை உண்மையென்று நம்பிய லட்சுமி, தனது காதிலிருந்த அரை பவுன் தங்கக் கம்மலைக் கழற்றி வைத்துள்ளார்.
தொடர்ந்து அந்தப் பெண் தனக்குப் பசிப்பதாகக் கூறி உணவு கேட்டுள்ளார். மூதாட்டி அவருக்குச் சாப்பாடு கொடுத்துவிட்டு, தட்டை வைப்பதற்காக வீட்டிற்குள் சென்ற அந்தச் சில நிமிட இடைவெளியில், மேசையிலிருந்த தங்கக் கம்மலை எடுத்துக் கொண்டு அந்தப் பெண் மாயமாகிவிட்டார். உள்ளே இருந்து வெளியே வந்த லட்சுமி, அந்தப் பெண்ணையும் தனது நகையையும் காணாமல் அதிர்ச்சியடைந்தார். சுமார் 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அந்தத் தங்க நகை திருடு போனது குறித்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
தனிமையில் இருக்கும் முதியவர்களைக் குறிவைத்து, அரசுத் திட்டங்கள் மற்றும் நல வாரிய உதவிகள் பெற்றுத் தருவதாகக் கூறி இது போன்ற மோசடி கும்பல்கள் உலவுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. முன்பின் தெரியாத நபர்களை வீட்டிற்குள் அனுமதிப்பதோ அல்லது அவர்கள் கூறும் ஆசை வார்த்தைகளை நம்பி நகைகளைக் கழற்றிக் கொடுப்பதோ ஆபத்தானது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள அந்த மர்மப் பெண்ணை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
