போலீஸ்காரர் வீட்டுக்கே ஸ்கெட்ச்.. கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய டவுசர் கொள்ளையர்கள்… விழுப்புரத்தில் நள்ளிரவு பயங்கரம்…!

By Nanthini on சித்திரை 21, 2026

Spread the love

விழுப்புரம் அருகே தமிழகக் காவல்துறையைச் சேர்ந்த தலைமை காவலர் வீட்டிலேயே புகுந்து, கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறிக்கப்பட்ட துணிகரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அடுத்த வளவனூர் தோப்பு காலனி பகுதியில் வசித்து வருபவர் ராஜசேகர் (32). இவர் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணியாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி இரவு பணியை முடித்துவிட்டு அதிகாலை நேரத்தில் தனது வீட்டில் அவர் உறங்கிக் கொண்டிருந்தபோது இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

நேற்று அதிகாலை சுமார் 4 மணி அளவில், முகமூடி அணிந்து ‘டவுசர்’ மட்டுமே அணிந்திருந்த மூன்று பேர் கொண்ட கொள்ளைய கும்பல், ராஜசேகரின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தது. அங்கு ஒரு அறையில் உறங்கிக் கொண்டிருந்த ராஜசேகரின் மனைவி கங்காதேவியின் (30) கழுத்தில் இருந்த 4.5 பவுன் தங்க நகையை அந்த கும்பல் பறிக்க முயன்றது. திடுக்கிட்டு எழுந்த கங்காதேவி தனது நகையை இறுகப் பிடித்துக்கொண்டு கூச்சலிடவே, பக்கத்து அறையில் இருந்த ராஜசேகர் ஓடி வந்து மின்விளக்கை ஒளிரச் செய்துள்ளார்.

   

நிலைமையை உணர்ந்த கொள்ளையர்கள், சட்டென்று ராஜசேகரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதோடு, அங்கிருந்த குழந்தையை இரும்புக்கம்பியால் அடித்துக் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இந்த மிரட்டலால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்த நிலையில், அந்த கும்பல் கங்காதேவியின் கழுத்தில் இருந்த 4.5 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு வீட்டின் பின்புறத் தோட்டம் வழியாக மின்னல் வேகத்தில் தப்பி ஓடியது. கூச்சலிட்டபடி ராஜசேகர் பொதுமக்களுடன் இணைந்து துரத்தியும், இருளைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் தப்பினர்.

   

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வளவனூர் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்குள்ள தடயங்களைச் சேகரித்தனர். பறிபோன நகையின் மதிப்பு சுமார் ₹4 லட்சம் என்று கூறப்படுகிறது. போலீஸ் ஏட்டு வீட்டிலேயே புகுந்து, உயிரைப் பறிப்பதாக மிரட்டி கொள்ளையடிக்கப்பட்ட இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், முகமூடி அணிந்த அந்த மர்ம கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.