ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், ஆன்லைன் சூதாட்ட போதையால் ஏற்பட்ட பணப்பற்றாக்குறையை மறைக்க, கடனாக பணம் கொடுத்த பெண்ணையே வாலிபர் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்தேபள்ளி கிராமத்தைச் சேர்ந்த சந்திரம்மா (36) என்ற பெண்மணி, தையல் வேலை செய்துகொண்டு தனது பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் சுப்பிரமணியம் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் நெருக்கமாக மாறியதாகக் கூறப்படுகிறது.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான சுப்பிரமணியம், தனது விளையாட்டிற்குப் பணம் தேவைப்பட்டபோது சந்திரம்மாவிடம் சுமார் 2 லட்சம் ரூபாய் வரை கடனாகப் பெற்றுள்ளார். காலம் கடந்து போன நிலையில், சந்திரம்மா தனது பணத்தை வட்டியுடன் திருப்பித் தருமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணியம், பணத்தைக் கொடுக்க வழியில்லாமல், சந்திரம்மாவைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்து தனது நண்பர்களான பிரசாத் மற்றும் நூர் அகமது ஆகியோருடன் இணைந்து ஒரு சதித்திட்டத்தைத் தீட்டினார்.
கடந்த மார்ச் 31-ம் தேதி, “உனக்குத் தர வேண்டிய பணத்தைத் தருகிறேன், அத்தோடு புதிய நகைகளும் வாங்கித் தருகிறேன்” என்று ஆசை வார்த்தை கூறி சந்திரம்மாவைத் தனது பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு மாந்தோப்பிற்கு அழைத்துச் சென்ற அவர், அங்கு ஏற்கனவே மறைந்திருந்த நண்பர்களுடன் சேர்ந்து சந்திரம்மாவைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இறுதியில் கழுத்தை நெரித்தும் கத்தியால் குத்தியும் சந்திரம்மாவைத் துடிக்கத் துடிக்கக் கொலை செய்துவிட்டு, சடலத்தை ஒரு வாடகை வாகனத்தில் ஏற்றி ஜகமர்லா காட்டுப்பகுதியில் வீசியுள்ளனர்.
மறைந்துபோன சந்திரம்மா குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், சந்தேகத்தின் பேரில் சுப்பிரமணியத்தைப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் சட்டையில் இருந்த ரத்தக் கறைகள் உண்மையை வெளிச்சமிட்டுக் காட்டின. விசாரணையில் கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்ட சுப்பிரமணியம் மற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு சாதாரணப் பணத் தகராறு மற்றும் சூதாட்டப் பழக்கம், ஒரு பெண்ணின் உயிரைப் பறித்ததோடு பல குடும்பங்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
