தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 15 வயது சிறுமி ஒருவர் கத்திமுனையில் மது குடிக்க வைக்கப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தின் நர்சிங்கி பகுதியைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவி, கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி பொருட்கள் வாங்கச் சென்றபோது 16 வயது சிறுவன் ஒருவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த சிறுவன் மாணவியின் செல்போன் எண்ணைப் பெற்று அவருடன் பழகி, இருவரும் காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி பள்ளிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய மாணவியை, அந்தச் சிறுவன் சார்மினார் பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். அங்கு வந்த மாணவியை, 24 வயதான ஆட்டோ ஓட்டுநர் இம்ரான் கான் மற்றும் மற்றொரு 16 வயது சிறுவனுடன் சேர்ந்து சார்மினாரில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து மாணவியை வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்ததோடு, கத்தியைக் காட்டி மிரட்டி மூவரும் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பள்ளி முடிந்து மகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், நர்சிங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் தனிப்படை அமைத்த காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தனர். தீவிர தேடுதலுக்குப் பிறகு மாணவி இருந்த இடத்தைக் கண்டுபிடித்த போலீசார், அவரை மீட்டதோடு குற்றவாளிகளை அடையாளம் கண்டனர்.
இந்தக் கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் இம்ரான் கான் மற்றும் ஒரு சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொரு சிறுவனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இம்ரான் கான் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை உள்ளிட்ட 8 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
