காஞ்சிபுரம் மாவட்டம் ரங்கசாமி குளம் கோட்டையை சேர்ந்த சக்திவேல்-சரண்யா தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். இவர்களது 2-வது மகள் கார்த்திகா காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து முடித்து காய்ச்சல் சரியாகும் என கூறி அனுப்பி வைத்தனர். அதன் பிறகும் காய்ச்சல் சரியாகவில்லை.
இதனால் மயக்க நிலைக்கு சென்ற கார்த்திகாவை பார்த்து பதறிய பெற்றோர் உடனடியாக காரப்பேட்டை பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கார்த்திகாவுக்கு வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திகா உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து காஞ்சிபுரம் சுகாதாரத்துறை இணை இயக்குனர் செந்தில் கூறிய போது காய்ச்சல் எதனால் வேண்டுமானாலும் வரலாம். உயிரிழந்த சிறுமி வசித்த பகுதியில் டெங்கு அல்லது தொற்றக்கூடிய எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அந்த பகுதி முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசோதனை செய்ய முடிவு எடுத்துள்ளோம். குழந்தை இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் எனக் கூறியுள்ளார்.
