அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வந்த தீவிர ராணுவ மோதல்களால், உலகின் மிக முக்கிய கடல் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் நீரிணை கடந்த சில மாதங்களாக முழுமையாக முடங்கியிருந்தது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், இப்பிராந்தியத்தில் கடல் போக்குவரத்தை மீண்டும் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கான சர்வதேச முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. இதன் முதற்கட்டமாக, போர்க் காலத்தில் ஈரான் கடற்படையால் கடலுக்கடியில் பதிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்கு உலக நாடுகள் தயாராகி வருகின்றன.
இந்த சர்வதேச கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் தங்களின் பங்களிப்பை வழங்குவதற்காக ஜெர்மனி தனது கடற்படை கப்பல்களை ஹார்முஸ் நீரிணை நோக்கி நகர்த்தத் தொடங்கியுள்ளது. ஜெர்மனி பாதுகாப்புத் துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி, ‘Fulda’ என்ற மைன்-ஹண்டர் (கண்ணிவெடி வேட்டை) கப்பலும், ‘Mosel’ என்ற சப்போர்ட் (ஆதரவு) கப்பலும் சூயஸ் கால்வாய் வழியாகச் செங்கடல் பகுதியை நோக்கிப் பயணித்து வருகின்றன. நேட்டோ அமைப்பில் கடல் கண்ணிவெடிகளை அகற்றுவதில் மிகவும் அனுபவம் வாய்ந்த படையாகக் கருதப்படும் ஜெர்மனி கடற்படை, சர்வதேச அனுமதி கிடைத்தவுடன் உடனடியாகப் பணிகளைத் தொடங்க முழுத் தயார் நிலையில் உள்ளது.
உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் இதயமாக விளங்கும் இந்த வழித்தடம் மீண்டும் திறக்கப்படுவதை ஒட்டுமொத்த சர்வதேச சந்தையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளது. வளைகுடா நாடுகளிலிருந்து பெருமளவு எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படும் இந்த தடம் பாதிக்கப்பட்டதால் உலகளவில் எரிசக்தி தட்டுப்பாடு நிலவியது. தற்போது ஏற்பட்டுள்ள அமைதிச் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் சீராகி, விலைகள் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடக்கமாக, அமெரிக்காவில் ஏற்கனவே எரிபொருள் விலை 4 டாலருக்கும் கீழ் குறைந்து சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய மதிப்பீடுகளின்படி, வளைகுடா பிராந்தியத்தில் மட்டும் சுமார் 160 மில்லியன் பேரல்களுக்கும் அதிகமான கச்சா எண்ணெய் உலகச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படக் காத்துக் கிடக்கின்றது. பாதுகாப்பு அபாயங்கள் காரணமாகப் பல நூறு சூப்பர் டேங்கர் கப்பல்களும் எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. ஹார்முஸ் நீரிணை முழுமையாகப் பாதுகாப்பானது என்று அறிவிக்கப்பட்ட அடுத்த கணமே, இந்த பிரம்மாண்ட எண்ணெய் சரக்குகள் உலக நாடுகளை நோக்கிப் புறப்படத் தொடங்கும். இது உலகளாவிய எண்ணெய் விலைகளில் நிலவி வரும் கூடுதல் அழுத்தத்தைக் பெருமளவு குறைக்கும் என்று சந்தை வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
