ஐயோ.. போலீசாருக்கே இந்த நிலையா?… ஏட்டுவை கதறவிட்டு நகையைப் பறித்த கும்பல்… நள்ளிரவில் நடுங்க வைத்த சம்பவம்…!!

By Swetha on ஆவணி 6, 2026

Spread the love

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணியாற்றி வருபவர் மேலகாமாக்காப்பட்டியைச் சேர்ந்த சசிக்குமார் (37). இவர் நள்ளிரவில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு, பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதர் மலைக்கோவில் பகுதியில் இருசக்கர வாகனத்தில் தனியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது கோவில் அடிவாரத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த இருவரிடம் அவர் விசாரணை நடத்தியபோது, அவர்களிடம் கடப்பாரை மற்றும் கம்பிகள் இருந்தது தெரியவந்தது. அவர்களைத் தரையில் உட்காரச் சொன்னபோது, அருகில் உள்ள வனப்பகுதியில் மறைந்திருந்த மேலும் 3 பேர் திடீரென வெளிவந்து சசிக்குமாரை ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். சசிக்குமார் எதிர்த்துப் போராடியபோதிலும், அக்கும்பல் தாக்கியதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், அவர் கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றபோது, சசிக்குமார் அதை இறுகப் பிடித்துக் கொண்டதால் பாதியளவு சங்கிலி மட்டும் கொள்ளையர்களிடம் சிக்கியது.

   

இச்சம்பவம் குறித்து சசிக்குமார் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கவே, அங்கு விரைந்த போலீசார் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தனிப்படை அமைத்துத் தப்பியோடிய கொள்ளைக் கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இரவில் ரோந்து சென்ற காவலரையே தாக்கி நகை பறித்த சம்பவம் கைலாசப்பட்டி பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.