பீகார் மாநிலம் பெகுசாராய் பகுதியில் உள்ள சாக்கியா காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தில், கடந்த ஜூன் 11 அன்று நள்ளிரவில் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளது. அங்கு இருந்த கணவரை ஒரு தனி அறையில் அடைத்துவிட்டு, கழிவறையில் இருந்து வெளியே வந்த அவரது மனைவியின் வாயைப் பொத்தி, ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்குக் கடத்திச் சென்றுள்ளனர். அந்தப் பெண் சத்தம் போட முயன்றபோது, பிளேடால் அவரது மார்பு மற்றும் தொடைப் பகுதிகளில் வெட்டி சித்ரவதை செய்து, ஐந்து பேரும் சேர்ந்து அவரை கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் தனது நாத்தனார் உதவியுடன் கணவரை மீட்டு, காவல்துறையினருக்குத் தகவல் அளித்துவிட்டு சர்தார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். எனினும், அவரது பிறப்புறுப்பில் தொடர்ந்து தாங்க முடியாத கடுமையான வலி இருந்ததால் மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது பிறப்புறுப்பில் இருந்து துப்பாக்கித் தோட்டா, கல் மற்றும் மரக்கட்டை உள்ளிட்ட பொருள்களை அகற்றியுள்ளனர். சித்ரவதையின்போது சுயநினைவிழந்ததால் தமக்கு இதுகுறித்து தெரியவில்லை எனப் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பும் ஒரு கும்பல் தங்களது வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாகவும், அதுகுறித்து காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். தற்போதைய சம்பவம் குறித்துப் பேசிய டிஎஸ்பி ஆனந்த் குமார் பாண்டே, பெண்ணின் வாக்குமூலமும், பிறப்புறுப்பில் இருந்து தோட்டா அகற்றப்பட்டதும் உண்மைதான் என்று உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், தலைமறைவாக உள்ள 5 குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
