சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள குருந்தனி வாரியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன், பொள்ளாச்சி அருகே டாஸ்மாக் பார் லீசுக்கு எடுத்து நடத்தி வந்தார். இவர் தனது புதிய காரை சிவகங்கையில் சர்வீஸ் செய்துவிட்டு, மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியரான தனது நண்பர் பூப்பாண்டியுடன் பழமலை நகர் கொடிக்கண்மாய் பகுதிக்குச் சென்று ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளார்.
அப்போது திடீரென அங்கு வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல், தெய்வேந்திரன் மற்றும் பூப்பாண்டியை அரிவாளால் விரட்டி விரட்டி வெட்டி, இருவரின் முகத்தையும் கொடூரமாக சிதைத்துவிட்டுத் தப்பியோடியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மிதந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பாலமுருகன், தனராஜ், சந்தோஷ், சதீஷ்குமார், காளீஸ்வரன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், கொலையின் முழு பின்னணியையும் அம்பலப்படுத்தக் கோரி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் உடல்களை வாங்க மறுத்துச் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது.
