மகாராஷ்டிர மாநிலம் பூனேவின் ஏரவாடா பகுதியில் உள்ள பரபரப்பான கோல்ஃப் கிளப் சாலையின் நேதாஜி சவுக் பகுதியில், செவ்வாய்க்கிழமை பட்டப்பகலில் ஒரு இளைஞர் மீது ஆயுதக் கும்பல் ஒன்று கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளது. காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக, அந்த இளைஞரைச் சூழ்ந்துகொண்ட கும்பல் கத்திகள் மற்றும் கம்பிகளால் நடுரோட்டில் வைத்துப் சரமாரியாகத் தாக்கியுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான இளைஞர், குற்றவாளிகளில் ஒருவரின் காதலியைப் பார்த்ததாகவும், அவர் அந்தப் பெண்ணின் முன்னாள் காதலனாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இத்தாக்குதலுக்குப் பின் தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த ஏரவாடா காவல்துறையினர், காயமடைந்த இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தப்பியோடிய கும்பலை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
