இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் வில்லன் நடிகராக வலம் வருகிறார் எஸ் ஜே சூர்யா. அவர் வில்லனாக நடித்த மாநாடு, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களின் அவரின் மிரட்டலான நடிப்புக்காகவே பாராட்டப்பட்டன. இதையடுத்து இப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக அடுத்தடுத்து கமிட்டாகி வருகிறார்.
தமிழ் சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற ஆசையோடு வந்த எஸ் ஜே சூர்யா முதலில் பாரதிராஜா மற்றும் இயக்குனர் வசந்த் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அஜித் ஆசை படத்தில் நடிக்கும் அதில் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ் ஜே சூர்யாவின் அர்ப்பணிப்பை பார்த்துவிட்டு அவருக்கு தன்னுடைய படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்துள்ளார்.
இயக்குனர் ஆவதற்கு முன்பு எஸ் ஜே சூர்யா பாரதிராஜா, ஜி எம் குமார், வசந்த் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக வேலை செய்துள்ளார். இதில் ஜி எம் குமாரிடம் தொடர்ந்து 6 ஆண்டுகள் அவர் உதவி இயக்குனராக வேலை செய்துள்ளாராம். எஸ் ஜே சூர்யா பற்றி தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் ஜி எம் குமார்.
அதில் “என்னிடம் இருந்தவர்கள் எல்லாம் போனபின்னரும் ஜஸ்டின் ஆறு ஆண்டுகள் இருந்தான். கடைசியாக நான் அவனைப் பார்த்தது 1997 ஆம் ஆண்டு. என்னிடம் இருந்த காலத்தில் நான் என்னை அறியாமல் அவனைக் காயப்படுத்தி விட்டேனோ என்னவோ தெரியவில்லை.
ஆனால் மிகத்திறமையான ஆள் ஜஸ்டின். 1970 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ஒரு படம் லவ் ஸ்டோரி. அந்த படத்தில் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் இடையே அவளுடைய மார்பை அவன் திருட்டுத் தனமாக பார்த்துவிட்டதாக ஒரு சண்டை வரும். அந்த ஒரு பொறியை மட்டும் வைத்துக்கொண்டே அவன் குஷி என்ற அற்புதமான படத்தை எடுத்துவிட்டான்” என பாராட்டியுள்ளார்.