கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் இரும்பணம் பகுதியைச் சேர்ந்தவர் 88 வயதான பார்வதி. இவர் கடந்த 25 ஆண்டுகளாக எர்ணாகுளம் அம்பாடி மலையைச் சேர்ந்த பாதிரியார் ஜேக்கப் என்பவரது வீட்டில் பணிபுரிந்து வந்தார். பாதிரியாரின் 6 வயது மகளான மெரினாவை ஒரு பெற்ற தாயைப் போல பாசத்துடன் வளர்த்து வந்த பார்வதி, அந்த குடும்பத்தினரால் வேலைக்காரப் பெண்ணாகப் பார்க்கப்படாமல் குடும்பத்தில் ஒருவராகவே அன்போடு நடத்தப்பட்டார்.
முதுமை காரணமாக கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்ட பார்வதிக்கு, பாதிரியார் ஜேக்கப்பும் அவரது மகள்களும் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து அன்போடு கவனித்துக் கொண்டனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி பார்வதி காலமானார். தன் குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்த பார்வதிக்கு இறுதி வரை தங்களது சொந்தக் குடும்ப உறுப்பினரைப் போல அருகில் இருந்து மருத்துவம் பார்த்ததுடன், அவரது மறைவிற்குப் பிறகு இந்து முறைப்படி அனைத்து இறுதிச் சடங்குகளையும் செய்து அந்த கிறிஸ்தவ குடும்பத்தினர் மனிதாபிமானத்தின் உன்னதத்தை வெளிப்படுத்தினர்.
மதங்களைக் கடந்து மனித நேயமும் அன்பும் மட்டுமே உயர்ந்தது என்பதை எர்ணாகுளம் பாதிரியார் குடும்பத்தினர் செய்த இந்தச் செயல் உணர்த்தியுள்ளது. சொந்த பந்தங்களின் அரவணைப்பு இன்றி வாழ்ந்த ஒரு மூதாட்டிக்கு, மாற்று மதத்தைச் சேர்ந்த ஒரு பாதிரியார் குடும்பம் செய்த இந்த இறுதிச் சடங்குகள் சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் நெகிழ்ச்சியையும் பாராட்டுதல்களையும் பெற்றுத் தந்துள்ளது.
