அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி தமிழக அரசை டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்படுவதற்கு, சொந்தக் கட்சியின் நிர்வாகிகளிடமிருந்தே அமைச்சர் ஒருவர் பெருமளவில் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “ஊழலை ஒழிப்போம்” என்று மேடைகளில் முழங்கிவிட்டு, தற்போது நடைபெறும் இந்த முறைகேடுகள்தான் முதலமைச்சர் விஜய் கூறிய “தூய சக்தி” அரசியலா? என தினகரன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அரசு வழக்கறிஞர் நியமனங்கள் போன்ற முக்கியப் பொறுப்புகளில் முழுமையான வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இதுபோன்ற முறைகேடுகள் மற்றும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி, அவர்கள் மீது அரசு எவ்விதப் பட்சபாதமும் இன்றி கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் டிடிவி தினகரன் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
