தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து, பெரம்பூரில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். பிரச்சாரத்தைத் தொடங்கிய வேகத்திலேயே பாதியிலேயே ரத்து செய்துவிட்டு அவர் வெளியேறியது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், தேர்தல் விதிமீறல் தொடர்பாக அவர் மீது புகாரும் எழுந்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த பரபரப்புக்கு மத்தியில், விஜய் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் இடம்பெற்றுள்ள அவரது சொத்து விவரங்கள் மற்றும் குடும்பத்தினரின் கடன் நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகி ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் அதிர வைத்துள்ளது.
குறிப்பாக, விஜய்யின் பிரமாணப்பத்திரத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவரிடமே கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவி சங்கீதா ₹12.60 கோடி, தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ₹3.02 கோடி, தாய் ஷோபா ₹87.12 லட்சம், மகன் ஜோசன் சஞ்சய் ரூ.8.78 லட்சமும், மகள் திவ்யா ஷாஷா ரூ.4.6 லட்சமும் கடனாக பெற்றுள்ளார்களாம். மேலும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்தும் ₹3 கோடி கடன் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலில் அடியெடுத்து வைத்த முதல் நாளிலேயே பிரச்சாரக் குழப்பம், தேர்தல் விசாரணை மற்றும் குடும்பத்தினரின் கடன் விவரங்கள் என அடுத்தடுத்த திருப்பங்களால் விஜய் குறித்த செய்திகள் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.
