“சாதாரண பஸ் மட்டுமில்ல, இனி அந்த பஸ்களிலும் இலவசம்”… தமிழக பெண்களுக்கு அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!

By Nanthini on ஆனி 29, 2026

Spread the love

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான விரிவான செயல் திட்டம் மற்றும் ஆலோசனைகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளுள் ஒன்றான இந்த ‘வெற்றிப் பயணம் திட்டம்’, சாதாரண பேருந்துகள் மட்டுமின்றி எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் மற்றும் தொலைதூரப் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வகையான அரசுப் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மிக விரைவில் நாட்டு மக்களுக்கு வெளியிடுவார் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

முன்னதாக, இத்திட்டத்தை எவ்வித தொய்வுமின்றி திறம்பட செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிதித்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்ற இக்கூட்டத்தைத் தொடர்ந்து, தமிழக போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் 8 அரசு போக்குவரத்து கழகங்களும் தங்களுக்கு உட்பட்ட 21,527 பேருந்துகள் மற்றும் அதற்கான நிதித் தேவைகள் குறித்த தனித்தனி அறிக்கைகளைத் தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. தொலைதூரக் கிராமங்களையும் நகரங்களையும் தடையின்றி இணைக்கும் வகையில் போக்குவரத்து வசதிகள் அமைய வேண்டும் என்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

   

அதேசமயம், போக்குவரத்துத் துறையின் வருவாயைப் பெருக்குவதற்கான புதிய திட்டங்களும், ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்ட திட்டங்களும் ஒவ்வொன்றாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், ஏழை எளிய மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் குளிரூட்டப்பட்ட சொகுசுப் பயண வசதியைப் பெற வேண்டும் என்ற அமைச்சரின் கோரிக்கையை ஏற்று, கூடுதலாக புதிய ஏசி பேருந்துகளைக் கொள்முதல் செய்யுமாறு போக்குவரத்துத் துறைக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இதற்கான புதிய பேருந்துகள் வாங்கும் நடவடிக்கைகள் தற்பொழுது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

   

அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தனது செய்தியாளர் சந்திப்பில் மக்கள் நல்வாழ்வு சார்ந்த மற்றொரு முக்கிய தகவலையும் பகிர்ந்துகொண்டார். அதன்படி, சேலம் அரசு பொது மருத்துவமனையில் புதிய குளிர்சாதன வசதிகளை அமைப்பது தொடர்பான பொதுமக்களின் கோரிக்கைகள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் விரைவில் துவங்கப்படும் என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.