இளம்பெண்களை காதல் மொழி பேசி ஏமாற்றி கூகுள்பே மூலம் ரூ. 20 லட்சம் வரை அபகரித்து மோசடி செய்த சென்னை வாலிபர் – கைது செய்த திண்டிவனம் போலீசார்!

By Elango on மார்கழி 12, 2025

Spread the love

இளம்பெண்களை ஏமாற்றி கூகுள்பே மூலம் 20 லட்சம் வரை சுருட்டிய காதல் மன்னனை போலீசார் கைது செய்தனர். டாக்டர் இன்ஜினியர் என ஏமாற்றி திருமணம் செய்வதாக மோசடி செய்த வாலிபர் வசமாக சிக்கினார். இதுவரை 20 பெண்களிடம் 20 லட்சம் ரூபாய் வரை பறித்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. திருமண தகவல் மையம் மூலமாக பல பெண்களை தொடர்பு கொண்டு டாக்டர் இன்ஜினியர் என பொய் பேசி ஏமாற்றியிருக்கிறார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் திருமண தகவல் மையம் மூலமாக பதிவு செய்திருக்கிறார். அப்போது சென்னை பூந்தமல்லி பகுதியை சேர்ந்த அருள்மொழி என்ற இளைஞர் அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். நாளடைவில் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்ட நிலையில், 12 லட்சம் ரூபாய் வரை அந்தப் பெண்ணிடம் கூகுள் பே மூலம் அருள்மொழி பெற்றிருக்கிறார்.

   

ஆனால் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்யாமல் பல நாட்களாக ஏமாற்றி வந்திருக்கிறார். இதுகுறித்து அந்த இளம் பெண் திண்டிவனம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி அந்த இளைஞரை கைது செய்தனர். அப்போதுதான் அவர் டாக்டர் இன்ஜினியர் என்று சொல்லி திருமண தகவல் மையம் மூலமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி 20 லட்சம் ரூபாய் வரை பறித்தது தெரிய வந்தது.

   

இவர் பெண்களிடம் காதல் மொழி பேசிப் பழகி பணத்தைப் பறித்துக் கொண்டு நாளடைவில் அவர்களை ஏமாற்றி விடுவதும் தெரியவந்தது. போலீசார் அந்த வாலிபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இளம் பெண்கள் இது போன்ற விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மோசடி நபர்களிடம் ஏமாறக் கூடாது என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.