இந்திய இரயில்வே மாற்றுத்திறனாளிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி மாற்றுத்திறனாளிகள் இரயில்களில் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட சிறப்புப் பெட்டிகளில் பயணிக்க ‘UDID’ (தனித்துவ அடையாள அட்டை) வைத்திருந்தால் மட்டுமே போதும். இதற்கு முன்பு இரயில்வே வழங்கிய தனிப்பட்ட சலுகை பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அந்தப் பெட்டிகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது நாடு முழுவதும் செல்லுபடியாகும் UDID அட்டையைப் பயன்படுத்தி முன்பதிவு இல்லாமலேயே அவர்கள் பயணம் செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதியானது விரைவு மற்றும் மெயில் இரயில்களில் உள்ள முன்பதிவு செய்யப்படாத சிறப்புப் பெட்டிகளுக்கும் பொருந்தும். மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளை மற்ற பயணிகள் ஆக்கிரமிப்பதைத் தடுக்கக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து மண்டல இரயில்வேக்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 40 சதவீதத்திற்கும் மேல் குறைபாடு உள்ளவர்களுக்கு இரண்டாம் வகுப்பு முதல் ஏசி வரை 75 சதவீதம் வரை கட்டணச் சலுகையும், கீழ் படுக்கை (Lower Berth) ஒதுக்கீட்டில் முன்னுரிமையும் தொடர்ந்து வழங்கப்படும் என இரயில்வே நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
