2026-ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கவிருந்த நிலையில், அதிமுக மற்றும் பாஜக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். முன்னதாக, கூட்டத் தொடரின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை எனக் கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையைப் புறக்கணித்துவிட்டு பாதியிலேயே வெளியேறினார்.
ஆளுநரின் இந்த முடிவைத் தொடர்ந்து, அவையில் இருந்த அதிமுக மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் மரபு மீறல்கள் குறித்து முழக்கங்களை எழுப்பிய அவர்கள், ஆளுநரைப் பின்தொடர்ந்து அவையிலிருந்து வெளியேறினர். ஆளுநரைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளும் வெளிநடப்பு செய்துள்ளதால் சட்டப்பேரவை வளாகத்தில் பெரும் அரசியல் பரபரப்பு நிலவுகிறது.
