மதுரைக்கு போக 31 ஆயிரமா?… பிளைட் டிக்கெட் விலையை கேட்டு மயக்கமே வந்துடும் போல.. விண்ணை முட்டும் டிக்கெட் விலையால் மக்கள் அதிர்ச்சி…!

By Nanthini on சித்திரை 22, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றச் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருகின்றனர். கடந்த ஒன்றரை மாதங்களாக நீடித்த அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்கள் ஓய்ந்துள்ள நிலையில், தற்போது தமிழக அரசியல் களம் நான்கு முனைப் போட்டியால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நீண்ட விடுமுறை காலத்தைப் பயன்படுத்திப் பலரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய ஆர்வத்துடன் இருக்கும் நிலையில், பேருந்து நிலையங்கள் மற்றும் இரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இருப்பினும், இந்தத் தேர்தல் தருணத்தைப் பயன்படுத்தித் தனியார் ஆம்னி பேருந்துகள் வழக்கத்தை விட மூன்று மடங்கு கூடுதல் கட்டணத்தைச் வசூலிப்பது பயணிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு தரப்பில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், போதிய இடவசதி இல்லாத காரணத்தால் மக்கள் தனியார் பேருந்துகளை நாட வேண்டிய சூழல் உள்ளது. கட்டண உயர்வு தொடர்பாகப் புகார் அளிக்க எண்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், களத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை எனப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

   

மறுபுறம், வான்வழிப் பயணக் கட்டணங்கள் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளன. சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கு ஒரு நபருக்கு ரூ. 31,000 வரையிலும், தூத்துக்குடிக்கு ரூ. 17,000 வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது சாதாரண மக்களையும் நடுத்தர வர்க்கத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய அநியாயக் கட்டண உயர்வு, ஆர்வத்துடன் ஊருக்குச் செல்ல நினைக்கும் வாக்காளர்களைப் பின்வாங்கச் செய்யக்கூடும் என்றும், இது ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சதவீதத்தில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.