உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அமைதி முயற்சிகள் எவ்வித உடன்பாடும் இன்றித் தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றன. இத்தகைய சூழலில், கடந்த 19-ஆம் தேதி உக்ரைனின் ஓடேசா நகர துறைமுகத்திலிருந்து புறப்பட்ட ‘எம்.வி கோல்டன் லியோ’ என்ற சரக்குக் கப்பல் மீது ரஷ்யப் படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கப்பலில் பயணம் செய்த 17 மாலுமிகளில் 5 பேர் இந்தியர்கள் ஆவர். இந்த கொடூரத் தாக்குதலில் கப்பலில் இருந்த 5 மாலுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்பாவி மாலுமிகளைக் பலிவாங்கிய இந்தத் தாக்குதலுக்கு இந்தியா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் கேரளாவைச் சேர்ந்த அகில் ஜோயன் (26) என்ற இந்திய மாலுமியும் ஒருவர் என்ற சோகமான உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது 19 வயதிலேயே கப்பல் பணியில் சேர்ந்த அகில், தனது குடும்பத்தின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாகவும் ஒற்றை மகனாகவும் விளங்கியவர். கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் இவருக்கு விமரிசையாகத் திருமணம் நிச்சயக்கப்பட்டு, இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம் நடைபெறவிருந்தது. திருமணத்திற்குப் பிறகு இந்த ஆபத்தான கப்பல் வேலையை விட்டுவிட்டு வேறு பணிக்கு மாற அவர் திட்டமிட்டிருந்த வேளையில், ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல் அவரது வாழ்க்கையையும், அவரது குடும்பத்தின் எதிர்காலக் கனவுகளையும் அடியோடு சிதைத்துவிட்டது.
