குஜராத் மாநிலம் வதோதரா அருகே உள்ள ஆற்றில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு சிறிய முதலை குட்டி மீன் பிடி வலையில் சிக்கியது. வலை கனமாக இருந்ததைக் கண்டு பெரிய மீன் சிக்கியிருக்கும் என்று நினைத்து வெளியே இழுத்த மீனவர்கள், உள்ளே முதலை குட்டி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஆனால், அந்த முதலைக்கு தீங்கு விளைவிக்க நினைக்காத மீனவர்கள், மனிதாபிமானத்துடன் அதனை மீட்க முடிவு செய்தனர்.
வலைக்குள் சிக்கித் தவித்த முதலையை மிகவும் கவனமாக வெளியே எடுத்த மீனவர்கள், அதற்கு எந்த காயமும் ஏற்படாதவாறு பாதுகாத்தனர். பின்னர் இது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களது முன்னிலையில் அந்த முதலை குட்டி மீண்டும் பாதுகாப்பாக ஆற்றில் விடப்பட்டது. பொதுவாக முதலைகளைக் கண்டாலே அச்சப்படும் சூழலில், மீனவர்களின் இந்தத் துரிதமான மீட்பு நடவடிக்கையும், வன உயிரினங்கள் மீதான அவர்களது அக்கறையும் சமூக வலைதளங்களில் வைரலாகிப் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
