தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி அருகே பைனான்ஸ் தொழில் செய்து வந்த பாண்டி (72) என்பவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று (பிப். 2) காலை தனது வீட்டை விட்டு ரேஷன் கடைக்குச் செல்வதற்காகப் புறப்பட்டவரை, அங்கு மறைந்திருந்த அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேனி மாவட்ட காவல்துறையினர், பாண்டியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பைனான்ஸ் தொழிலில் ஏற்பட்ட பணத் தகராறு காரணமாக இக்கொலை நடந்ததா அல்லது பழைய முன்விரோதம் ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகரக் கொலைச் சம்பவம் தேனி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
