கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஐய்யர் மலையில் இருந்து குளித்தலை நோக்கி வந்த தனியார் பேருந்தும், எதிரே வந்த மற்றொரு தனியார் பேருந்தும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த மோதலின் வேகம் காரணமாக இரு பேருந்துகளின் முன்பகுதிகளும் பலத்த சேதமடைந்தன. இதில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குளித்தலை காவல்துறையினர், பொதுமக்களின் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காகக் குளித்தலை மற்றும் கரூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், ஓட்டுநர்களின் கவனக்குறைவு காரணமாக விபத்து நேரிட்டதா என்பது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
