பிரபல தென்னிந்திய நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் அவரது கணவர் சோஹைல் கதுரியா ஆகியோருக்கு இடையிலான திருமண வாழ்க்கை சட்டரீதியாக முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு ஜெய்ப்பூரில் கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமணத்திற்குப் பிறகு, சில காலத்திலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறிப்பாக, சோஹைலின் சகோதரி ஹன்சிகா மற்றும் அவரது தாயார் மீது அளித்த புகார் உள்ளிட்ட பல்வேறு குடும்பப் பிரச்சினைகளால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தற்போது மும்பை குடும்ப நல நீதிமன்றம் இவர்களுக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
இந்த விவாகரத்து வழக்கில் ஹன்சிகா தரப்பில் எவ்வித ஜீவனாம்சமும் கோரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல கட்ட சமரசப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பரஸ்பர சம்மதத்துடன் இருவரும் பிரிந்துவிட முடிவு செய்த நிலையில் நீதிமன்றம் இந்த இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்நிலையில் தமிழில் ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் அறிமுகமாகி பல வெற்றித் திரைப்படங்களில் நடித்த ஹன்சிகாவின் இந்த தனிப்பட்ட வாழ்க்கை முடிவு, அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அதேசமயம் அவர் தனது அடுத்தக்கட்ட சினிமா பயணத்தில் கவனம் செலுத்த வாழ்த்துகளையும் பெற்று வருகிறது.
