அகமதாபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதைக் கொண்டாடிவிட்டு, ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். அப்போது நரேந்திர மோடி மைதானத்திற்கு வெளியே நேரலையில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த விளையாட்டுப் பத்திரிகையாளர் கார்கி ரவுத் என்பவரை, கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் தகாத முறையில் தொட்டுள்ளார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அவர் கேமரா முன் பேசிக் கொண்டிருந்தபோதே அரங்கேறியுள்ளது.
If you put your hands on me inappropriately. I will put your face on the internet.
A reporter should be able to do their job without being touched inappropriately. @AhmedabadPolice pic.twitter.com/bGqOJGJWtD
— Gargi Raut (@gargiraut15) March 9, 2026
இந்தச் சம்பவம் தொடர்பான ஆறு வினாடி கால அளவிலான வீடியோ காட்சியை கார்கி ரவுத் தனது ‘X’ தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் செய்திகளை வாசித்துக் கொண்டிருக்கும்போது, அவருக்குப் பின்னால் கடந்து செல்லும் ஒரு நபர் அநாகரிகமான முறையில் அவரைத் தொடுவதும், இதனால் அதிர்ச்சியடைந்த கார்கி ரவுத் ஒரு கணம் பேச்சை நிறுத்திவிட்டு உறைந்து போவதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அந்த நபரின் முகத்தை மறைக்காமல் வெளியிட்ட அவர், “தவறான முறையில் என் மீது கை வைத்தால் உன் முகத்தை இணையத்தில் வெளியிடுவேன்” என்று ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.
மேலும், ஒரு பெண் செய்தியாளர் எவ்வித இடையூறுமின்றி தனது வேலையைச் செய்யும் சூழல் நிலவ வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இந்த விவகாரம் தொடர்பாக அகமதாபாத் காவல்துறையையும் டேக் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் செய்த நபரை அடையாளம் காணும் வகையில் பலரும் வீடியோவின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்து வருவதோடு, அந்த நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
